ஏனைய நாடுகளுடனான அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் இலங்கையின் கவலை அல்ல - ஜனாதிபதி
இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகளிற்கு ஜனாதிபதி அனுரகுமார
திஸாநாயக்கவிடமிருந்து பலமான ஆதரவு கிட்டியுள்ளது.
இந்தியாவின் Economic Times உடனான பிரத்தியேக நேர்காணலின் போது தனது அரசாங்கம், குழுமத்தின் சர்வதேச பரிவர்த்தனைகளைக் காட்டிலும் உள்ளூர் செயல்திறனிற்கே முக்கியத்துவம் அளிப்பதாக அவர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கான இந்திய திட்டங்களின் நன்மைகளை மதிப்பிடும் அதே வேளை அவர்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கான தனது நிர்வாகத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி திஸாநாயக்க, எங்களுக்கு அவர்கள் எங்களுடன் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதே முக்கியமானது என்று தெரிவித்தார்.
அவரது அரசாங்கத்தின் ஆதரவு குறிப்பாக பிராந்திய கடல்சார் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் CWIT திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
கொழும்பு மேற்கு சர்வதேச முனைய (CWIT) திட்டத்துடன் அதானி துறைமுகங்கள் (Adani Ports) முன்னேறி வரும் நிலையில், முன்பு திட்டமிடப்பட்ட US DFC நிதியை கைவிட்டு தற்போது சுயநிதியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
CWIT திட்டத்திற்கு $700 மில்லியனை சுயநிதியாக வழங்க அதானி துறைமுகங்கள் எடுத்த முடிவு, குழுவின் நிதிப் பலம் மற்றும் இலங்கைச் சந்தை மீதான அவர்களின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
முன்னர் அறிவிக்கப்பட்ட $553 மில்லியன் அமெரிக்க DFC கடன் ஏற்பாட்டிலிருந்து விலகுவதற்கான முடிவு, நிறுவனத்தின் நிதி சுதந்திரத்தை எடுத்துக் காட்டுகிறது.
அதானியின் நிதித் திறன்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், அவர்கள் அதை கைவிட்டுவிட்டார்கள் என்பதை நான் அறிந்தேன், ஆனால் அதற்கான சொந்த வருவாய் அல்லது வருமான மூலங்கள் அவர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது என்று ஜனாதிபதி திஸாநாயக்க குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள CWIT திட்டம், இலங்கையின் கடல்சார் உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
எரிசக்தி துறையில் சில திட்டங்கள் குறித்து சுற்றுச்சூழல் கவலைகள் எழுப்பப்பட்டமையை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, சமநிலையான அணுகுமுறையை பேணினார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் சாதக பாதகங்களை நாங்கள் கருத்திற் கொள்வதுடன் மக்களின் ஒருமித்த கருத்தையும் கவனத்தில் கொள்வோம். என்று அவர் கூறினார். மேலும், இலங்கைக்கு முதலீட்டைப் போலவே சுற்றுச்சூழல் அக்கறைகளும் முக்கியம் என்று வலியுறுத்தினார்.
ஜனாதிபதியின் அணுகுமுறை, குறிப்பாக எரிசக்தி துறையில் அதானியின் சாத்தியமான முதலீடுகள் தொடர்பாக, அபிவிருத்தித் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றுக்கு இடையிலான கவனமான சமநிலையை பிரதிபலிக்கிறது. எவ்வாறாயினும், இலங்கையின் அபிவிருத்தி முன்முயற்சிகளுடன் ஒத்துப்போகும் திட்டங்களில் அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி திஸாநாயக்கவின் நிலையான அரசாங்கம் அதிக இந்திய முதலீடுகளுக்கு வழி வகுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை பிரதிபலிக்கின்றது.
எதிர்காலத்தில் சர்வதேச நிபுணத்துவத்துடன் உள்ளூர் கூட்டாண்மைகளை இணைத்து உட்கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்வதற்கு CWIT திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்துகை மாதிரியாக செயற்படும்.
திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் சுயநிதிக்கான அதானியின் அர்ப்பணிப்பு பரந்த பிராந்திய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் குழுமத்தின் நிதி வலிமை மற்றும் முதலீட்டிற்கு கவர்ச்சிகரமான இடமாக இலங்கையின்
இருப்பிடம் ஆகிய இரண்டையும் நிரூபிக்கின்றன.
editor