ஜப்பான் உதவியுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நவீன சிடி ஆஞ்சியோ மற்றும் பல் மருத்துவ பிரிவு திறப்பு
Japan has handed over advanced CT angiography and dental units to Sri Jayewardenepura Hospital, strengthening Sri Lanka’s healthcare system and improving diagnosis and treatment of major diseases.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவமனையின் பிற சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப் பிரிவு மற்றும் 4டி ஆஞ்சியோ சிடி சிகிச்சை அறையை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வு, சுகாதாரத் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை எடுத்துக்காட்டியது. டிசம்பர் 2023-ல் கண் மருத்துவ உபகரணங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஒப்படைப்பு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கிறது. தற்போதைய கட்டமானது, தெற்காசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது.
இந்தப் பங்களிப்புகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட தொற்ற நோய்களை (NCDs) எதிர்கொள்வதற்கான இலங்கையின் திறனை மேம்படுத்துதல், அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்றவும், நீண்டகால சிக்கல்களைக் குறைக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு, சிடி ஸ்கேனிங் மற்றும் ஆஞ்சியோகிராபி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் நோயறிதலையும் சிகிச்சையையும் சாத்தியமாக்குகிறது. இது இலங்கையிலும் பரந்த பிராந்தியத்திலும் ஒரு முக்கிய மருத்துவ மையமாக மருத்துவமனையின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 10 பல் மருத்துவப் பிரிவுகளை வழங்குவது, மருத்துவமனையில் பல் மருத்துவ சேவைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். ஜப்பானில், வாய்வழி ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் நலத்துடன் நெருக்கமாக இணைந்ததாகக் கருதப்படுவதோடு, ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் இது ஒரு முக்கியப் பங்கையும் வகிக்கிறது. எனவே, இந்த ஆதரவானது இலங்கையில் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் திட்டமிடப்பட்ட 1,000 படுக்கைகளுடன் மேலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்தன தெரிவித்த கருத்திலிருந்து உருவான, நன்கு அறியப்பட்ட “1001-படுக்கை” கதை, இந்த ஒத்துழைப்பின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு மறக்கமுடியாத அத்தியாயமாக விளங்குகிறது.
பல தசாப்தங்களாக, மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், இரத்த விநியோக அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் போது தடுப்பூசி விநியோக உதவி வழங்குதல் உள்ளிட்டவற்றின் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது. மேலும், இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது, சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான எரிபொருளை ஜப்பான் வழங்கியதுடன், இயற்கை பேரிடர் காலங்களில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக அவசர மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது. இந்த முயற்சிகள், குறிப்பாகத் தேவைப்படும் காலங்களில், இலங்கைக்குத் துணை நிற்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த முயற்சிகள், அனைத்து தனிநபர்களும் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய ஒரு சுகாதார அமைப்புக்கு ஆதரவளித்து, “மக்களில் முதலீடு” மற்றும் “மனிதப் பாதுகாப்பு” ஆகியவற்றில் ஜப்பானின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.
இந்த ஆதரவு என்பது வெறும் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்ல, அது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான அடித்தளமாகும்," எனத் தூதுவர் இசொமதா குறிப்பிட்டார். ஜப்பானின் ஆதரவுடன் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் சின்னமாகத் திகழ்கிறது.
வருங்கால சந்ததியினருக்குப் பயனளிக்கும் ஒரு நிலையான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கும், நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.
அமைச்சர் ஜயதிஸ்ஸ அவர்கள், “இது வெறும் இயந்திரங்களின் நன்கொடை மட்டுமல்ல; இது நமது நோயாளிகளின் வாழ்விலும் எதிர்காலத்திலும் செய்யப்படும் ஒரு முதலீடாகும். இந்த நவீன பல் மருத்துவப் பிரிவை நிறுவுவதன் மூலம், நமது மக்களிடையே வாய்வழி நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் உள்ள ஒரு முக்கியத் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம். இந்த தாராளமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை உண்மையான நட்பின் செயல்கள், மேலும் இலங்கை மக்கள் இவற்றை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூருவார்கள்” என்று சிறப்பித்து குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ஆழப்படுத்தவும் ஜப்பான், இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும்.
editor