மிளகு, ஏலக்காய், கறுவா திருட்டு அதிகரிப்பு: அரசின் தலையீட்டை கோரும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

The Planters' Association of Sri Lanka warns that organised theft of high-value crops is causing multi-million rupee losses, reducing investment, and affecting farmers' livelihoods. The industry has urged the government to strengthen laws and enforcement.

மிளகு, ஏலக்காய், கறுவா திருட்டு அதிகரிப்பு: அரசின் தலையீட்டை கோரும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

மதிப்புமிக்க விவசாயப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படுவதை ஒரு கடுமையான பொருளாதார அச்சுறுத்தலாகக் கருதுமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த இழப்புகள் தடுக்கப்படாவிட்டால், அது முதலீடுகளைத் தடுக்கும், ஏற்றுமதிப்
போட்டித்தன்மையைக் குறைக்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையின் பெருந்தோட்ட மாவட்டங்களில் மிளகு, ஏலக்காய், கறுவா உள்ளிட்ட உயர்மதிப்புப் பயிர்கள் திட்டமிட்டுத் திருடப்படும் சம்பவங்கள், அந்தத் துறையில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

இதனால், நிறுவனங்கள் பாதுகாப்பிற்காகப் பெருந்தொகையைச் செலவிடுவதுடன், பல விவசாயிகள் பயிர்
விரிவாக்கத் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர். இந்தச் சூழல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தேயிலை மற்றும் வாசனைப் பயிர்த் துறையின் சர்வதேச போட்டித்தன்மையையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இத்துறையில் ஏற்படும் பயிர் இழப்புகள் மில்லியன் கணக்கில் இருக்கலாம் என்று இச்சங்கம் மதிப்பிட்டுள்ளது; எனினும், உண்மையான இழப்புத் தொகையைக் கண்டறிய அதன் உறுப்பினர்களிடமிருந்து உத்தியோகப்பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட தரவுகளை தற்போது திரட்டி வருகிறது.


திருடப்பட்ட அறுவடையைத் தாண்டி, இதனால் ஏற்படும் நிதிச் சேதம் மிக அதிகம் என்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிவதாக இச்சங்கம் கூறுகிறது.

பிரச்சினையின் அளவு

பயிர் திருட்டுகள் மிகவும் திட்டமிட்டபடியும், நோக்கத்தோடும் நடத்தப்படுகின்றன. முழு பௌர்ணமி காலங்களில், டோர்ச் லைட்டுகள் இல்லாமலேயே நிலத்தில் வேலை செய்ய இயற்கை வெளிச்சம் கிடைப்பதால், இத்திருட்டுகள் அந்த நாட்களில் அதிகமாக நடப்பதாகச் சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திருட்டுக் குழு, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் ஒரு பகுதி கறுவாவைத் உரித்துவிட முடியும்; அல்லது ஒரே முறையில் ஏலக்காய் தோட்டத்தை முழுமையாகத் துப்புரவு செய்துவிட முடியும்; அல்லது விடியற்காலைக்கு முன்பாக ஒரே கொடியில் இருந்து 40 முதல் 50 கிலோ மிளகை அறுவடை செய்துவிட முடியும். பயிர்கள் வயலை விட்டு வெளியேறி, முறைசாரா விநியோக வழிகளுக்குள் சென்றவுடன், அவற்றை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது. 

ஒரு நிறுவனம் தற்போது ஒரு குறிப்பிட்ட பயிரைப் பாதுகாப்பதற்காக, மூன்று மாத காலத்திற்குள் சுமார் 20 மில்லியன் ரூபாயைச் செலவிடுகிறது. இந்தச் செலவுகள் விவசாயப் போட்டித்தன்மை குறித்த எந்தவொரு அரசாங்கக் கணக்கீட்டிலும் இடம்பெறுவதில்லை; ஆனால், இவை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் உண்மையான செலவுகளாகும். வியட்நாம், இந்தியா மற்றும் கென்யா போன்ற குறைந்த
செலவில் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஏற்கனவே போட்டியிட்டு வரும் பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கு (RPCs), இது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. இதனால், நிறுவனங்களின் வருவாய் குறைவதுடன், அரசாங்கத்திற்கும் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

முதலீட்டு முடிவுகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன 

தொடர் திருட்டு காரணமாக மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற உயர்மதிப்புப் பயிர் விரிவாக்கத்தை உற்பத்தியாளர்கள் கைவிட்டுள்ளதால், முதலீட்டாளர்களின் நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் செலவுகள் கட்டுப்படியாகாத காரணத்தால், 18 ஹெக்டேயர் ஏலக்காய் திட்டத்தை ஒரு நிறுவனம் கைவிட்டதை இதற்குச் சான்றாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் விவசாய ஏற்றுமதியை அதிகரிக்கவும், இத்துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் பகிரங்கமாக உறுதியளித்துள்ளது. ஆனால், கள நிலவரங்கள் உயர்மதிப்புப் பயிர் உற்பத்தியை விவசாயிகளுக்குப் பேராபத்தாக மாற்றியிருக்கும் போது, இந்த இலக்கை அடைய முடியாது என்பதே இச்சங்கத்தின் நிலைப்பாடாகும்.

நடைமுறையிலுள்ள சட்டம் பலனளிக்கவில்லை

விவசாயத் திருட்டு என்பது தற்போதைய இலங்கைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவியல் குற்றமாகும். ஆனால், இந்த குற்றத்திற்கான தண்டனைகள், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளோடு எவ்வகையிலும் ஒத்துப்போகவில்லை என்பதே இச்சங்கத்தின் கவலையாகும். பல சந்தர்ப்பங்களில், திருடப்பட்ட பொருட்களின் மதிப்பில் மிகக் குறைந்த அளவே அபராதமாக விதிக்கப்படுவதால், அது மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோரைத் தடுக்கும் வகையில் அமைவதில்லை. குற்றத்தை விட அதற்கான தண்டனை மலிவாக இருக்கும்போது, சட்டம் தன் வீரியத்தை இழந்துவிடுகிறது.

தொழில்நுட்பத் தீர்வுகளால் பயிர் பாதுகாப்பில் உள்ள இடைவெளியை இதுவரை ஈடுசெய்ய முடியவில்லை, ஏனெனில் CCTV, கைரேகை கட்டுப்பாடுகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற அமைப்புகள் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் மின்வெட்டு காரணமாக தோல்வியடைகின்றன. மேலும், பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட வேலி மற்றும் உபகரணங்களே தற்போது திருடர்களின் இலக்காக மாறியுள்ளன. 

செயல்பாட்டுக்கான அவசர அழைப்பு

அதன்படி, விவசாயத் திருட்டுகளுக்கான அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகள் திருடப்பட்ட பயிர்களின் உண்மையான மதிப்பை வெளிப்படுத்துவதாகவும், குற்றவாளிகளைத் தடுக்கும் வகையில் அமைவதாகவும் சட்டங்களை மாற்றியமைத்து, அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், திருடப்பட்ட பயிர்கள் வயலை விட்டு வெளியேறிய பிறகும் அவற்றைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், முறைசாரா விநியோகச் சங்கிலிகளுக்குள் உயர்மதிப்புப் பயிர்களைக் கண்காணிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. இறுதியாக, தேசிய விவசாயக் கொள்கையில் பயிர் திருட்டை ஒரு முக்கியப் பிரச்சினையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து,
அதற்கேற்பப் பாதுகாப்புப் படைகளுக்கான வளங்களை ஒதுக்குமாறும் அச்சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) சிறுதோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெரிய தோட்ட நிறுவனங்கள் ஆகிய இரண்டிலும் ஏற்பட்டுள்ள பயிர் இழப்புகளின் அளவு குறித்த சரிபார்க்கப்பட்ட தரவுகளை அதன் உறுப்பினர்களிடமிருந்து சேகரித்து வருகிறது. இந்தத் தகவல்களை சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சுகளிடம் சமர்ப்பிக்க அச்சங்கம் திட்டமிட்டுள்ளது. 

மதிப்புமிக்க பயிர் ஏற்றுமதியில் ஒரு முக்கிய நாடாக விளங்குவதற்கான காலநிலை, நிலம் மற்றும் விவசாய அறிவு இலங்கையிடம் உள்ளது. ஆனால், ஒரு விவசாயி ஒன்பது மாதங்கள் பாடுபட்டு வளர்த்த பயிரை, அதற்கான பலன் கிடைப்பதற்கு முந்தைய நாள் இரவில் அனைத்தையும் இழக்க நேரிட்டால், அத்தகையதொரு எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியாது. இது ஒரு சிறிய அசௌகரியம் அல்ல. இது ஒட்டுமொத்த அமைப்பிலும் உள்ள ஒரு பெரிய குறைபாடாகும்; இதற்கு முறையான, ஆழமான கட்டமைப்பு ரீதியான தீர்வு தேவை,” என்று இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.