ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த 90 மாணவர்களைக் கொண்ட மற்றொரு குழுவிற்கு சான்றிதழ்களை வழங்கிய அமெரிக்கத் தூதரகம்

The U.S. Embassy in Sri Lanka celebrated the graduation of 90 students from Jaffna, Trincomalee, and Nuwara Eliya who completed the two-year English Access Scholarship Program, enhancing English and leadership skills for youth from underserved communities.

ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த 90 மாணவர்களைக் கொண்ட மற்றொரு குழுவிற்கு சான்றிதழ்களை வழங்கிய அமெரிக்கத் தூதரகம்

காலி, இலங்கை: ஜூன் 9, 2025 - அமெரிக்காவினால் நிதியுதவியளிக்கப்பட்ட English Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த 90 இரண்டாந்தரப் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 2025, ஜூன் 9ஆம் தேதி கொண்டாடியது.

காலியில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், Smart International Professionals for Leadership Education (SIPLEE) இன் பணிப்பாளர் பேராசிரியர் காமினி பொன்சேகா மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். SIPLEE உடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்த இலவச இருவருட நிகழ்ச்சித்திட்டமானது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள இளையோருக்கு தீவிர ஆங்கில மொழி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் அதேவேளை அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளையும் பலப்படுத்துகிறது.

இவ்வைபவத்தில் உரைகளை ஆற்றியும், ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றியும் பாடல்களைப் பாடியும் Access மாணவர்கள் தமது வளர்ந்து வரும் தன்னம்பிக்கையையும் ஆங்கிலமொழிப் புலமையையும் வெளிப்படுத்தினர். மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி, இந்நிகழ்ச்சித்திட்டம் கொண்டுள்ள பரந்த தாக்கத்தை அடிக்கோடிட்டுக்காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பின்வருமாறு குறிப்பிட்டார்: 

“ஆங்கில மொழியினைப் போதிப்பதற்கு மேலதிகமாக Access போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களையும் மேற்கொள்கின்றன. இம்மாணவர்கள், தொழிநுட்பம் முதல் அரசசேவை வரை, தாம் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு துறையிலும் வெற்றிபெறுவதற்கு உதவக்கூடிய தகவல் தொடர்புத் திறன், தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய மனநிலை ஆகியவற்றை விருத்தி செய்து கொள்கிறார்கள். இது இலங்கையிலும் அதற்கு அப்பாலும் தலைமை தாங்கி வழிநடத்துவதற்குத் தேவையான திறன்களை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதைப் பற்றியதாகும்.” கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதானது எமது இரு நாடுகளுக்கும் மற்றும் உலகளாவிய சமூகத்திற்கும் பலமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு உலகத்தை உருவாக்குவதால், Access போன்ற முன்முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது.

ஆங்கில Access நிகழ்ச்சித்திட்டம் பற்றி: ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் என்பது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிதியளிக்கப்படும் ஒரு உலகளாவிய முன்முயற்சியாகும். இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலம், தலைமைத்துவம் மற்றும் தொடர்பாடல் திறன்களில் இருவருட இலவச பயிற்சியினை வழங்குகிறது. 

அமெரிக்கத் தூதரகத்தினால் நிதியளிக்கப்படும் இந்நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையில் ஐந்து இடங்களில் உள்ளூர் கல்வியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்துவது மட்டுமன்றி, அவர்களின் தன்னம்பிக்கை, குடிமை விழிப்புணர்வு, அமெரிக்க கலாச்சாரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பற்றிய புரிதலையும் Access நிகழ்ச்சித்திட்டம் அதிகரிக்கிறது. 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்நிகழ்ச்சித் திட்டமானது நாடு முழுவதுமுள்ள 1,300இற்கும் மேற்பட்ட இளைஞர்களை வலுவூட்டியுள்ளது. Access நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த பல மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கும், போட்டித்தன்மை வாய்ந்த அமெரிக்க பரிமாற்ற புலமைப்பரிசில்களை வெல்வதற்கும், கல்வி, தொழில்நுட்பம், வணிகம் மற்றும் அரசசேவை போன்ற தொழில்களில் நுழைவதற்கும் வாய்ப்பைப் பெறுவதுடன் அரச மற்றும் தனியார் துறைகளில் தலைமைப் பாத்திரங்களையும் வகிக்கின்றனர்.

நிஜ உலக தொடர்பாடல் மற்றும் தனிப்பட்ட விருத்தியினை வலியுறுத்தும் ஊடாடும், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி இலங்கையைச்சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஆங்கில மொழி தொழில்வாண்மையாளர்களால் Access வகுப்புகள் நடத்தப்படுகின்றன.