இலங்கையிலுள்ள வீட்டுப் பணியாளர்களை அத்தியாவசிய பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய நேரம் !

June 16 marks Domestic Workers Day and the 14th anniversary of ILO Convention 189, which affirms domestic workers' rights to legal protection, social respect, and decent work conditions.

இலங்கையிலுள்ள வீட்டுப் பணியாளர்களை அத்தியாவசிய பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய நேரம் !

வீட்டுப் பணியாளர்கள் சட்ட பாதுகாப்பு, சமூக மரியாதை மற்றும் கண்ணியமான வேலைக்கு உரித்துடையவர்கள். வீட்டுப்பணியாளர் தினமான 16 ஜூன், வீட்டுப்பணியாளர்கள் குறித்த சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) சமவாயத்தின் 189ஆம் இலக்க பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. 

இது தனியார் வீடுகளில் ஊதியம் பெற்றுத் தொழிலாற்றும் பணியாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் முக்கியமான உலகளாவிய ஒப்புதலாகும்.

இந்த பிரகடனம், வீட்டுப்பணியாளர்களும் வேறு எந்தத் தொழிலாளர்களைப் போலவே சட்ட பாதுகாப்பு, நியாயமான ஊதியம் மற்றும் மரியாதை பெற தகுதி உள்ளவர்கள் என்ற
அடிப்படையான உண்மையை வலியுறுத்துகிறது.

இருப்பினும், உலகம் முழுவதும் மற்றும் இலங்கையிலும் வாழும் பல்வேறு வீட்டுப்பணியாளர்களுக்கான இந்த அங்கீகாரம் இன்னும் ஒரு கற்பிதமான கனவாகவே இருந்து வருகிறது.

நாம் வாழும் இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அனர்த்தங்கள், சுகாதார அவசர நிலைகள் மற்றும் உயர்ந்து வரும் சமத்துவமின்மை போன்ற சவால்கள், வீட்டுப்பணியாளர்களின் உழைப்பின் இன்றியமையாத முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.

பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாத, குறைத்து மதிப்பிடப்பட்ட இந்த உழைப்பானது உண்மையில் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் தொழிற்பட உதவும் அடித்தளமாகும். பெரும்பாலும் அனர்த்த நிலைமைகளின்போது சத்தமின்றி முன்வந்து தமது சொந்த செலவில் கூட துப்புரவுப்பணி, பராமரிப்பு மற்றும் அன்றாட வாழ்வின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தல் என்பனவற்றில் ஈடுபடுபவர்கள் வீட்டு பணியாளர்களே என்பதும் மறுக்க முடியாத உண்மை.

COVID-19 பெருந்தொற்று காலத்தில், வீட்டுப்பணியாளர்கள் பல்வேறு கடுமையான சவால்களை எதிர்கொண்டனர். பிராந்தியத்தின் பல நாடுகளில் நடந்ததுபோல, இலங்கையிலும் பலர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்ததோடு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது சொந்த இல்லங்களுக்கு திரும்ப முடியாத அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொண்டனர்.

அவர்கள் வழங்கிய சேவைகள் சமூகத்திற்கும் குடும்பங்களுக்கும் இன்றியமையாதவையாக இருந்தபோதிலும், உரிய சட்டபூர்வமான பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பலரும் உத்தியோகபூர்வ நிவாரண நடவடிக்கைகளிலும், தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களிலும் இடம்பெற முடியாமல் புறக்கணிக்கப்பட்டனர்.

இன்றும் பராமரிப்புப் பணி சமூகத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாக அங்கீகரிக்கப்பட்டு வரும் நிலையில் கூட, இலங்கையில் பல வீட்டுப்பணியாளர்களுக்கு எழுத்துமூல தொழில்  ஒப்பந்தங்கள், வரையறுக்கப்பட்ட பணிநேரம், அல்லது உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வு நாட்கள் போன்ற அடிப்படை தொழிலாளர் உரிமைகள் எட்டாக்கனியாகவே உள்ளன. மிகக் குறைவானோர் மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது பணியின் முறைசாரா தன்மை, அவர்களை ஆதரவோ அல்லது அங்கீகாரமோ இன்றி தொழில் சுரண்டலுக்கு உட்படும் அபாயத்தில் தள்ளுகிறது. ஆனாலும், நம்பிக்கையின் ஒளிக்கீற்றுக்கான வழியும் தென்படுகிறது. வீட்டுப்பணியாளர் தினத்தையொட்டி, இலங்கையில் உள்ள சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO), வீட்டுப்பணியாளர்களுக்கான தரநிலைப்படுத்தப்பட்ட தொழில் ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இது, ஆலோசனை மற்றும் நடைமுறை நடவடிக்கைகளுக்கான முக்கியமான கருவியாக செயல்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், வீட்டுப்பணியாளர்களுக்கும் அவர்களது தொழில்வழங்குநர்களுக்கும் இடையே தெளிவான தொழில் உறவை ஏற்படுத்துவதோடு, அடிப்படை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வரையறுத்து, இரு தரப்புகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த முன்னெடுப்பு, சமூக நீதி மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரந்ததொலைவிலான செயற்திட்டத்திற்கு பங்களிக்கின்றது. இது, வீட்டுப்பணியாளர்களின் உரிமைகளை முன்னிறுத்தும் ILO சமவாயத்தின் 189ஆம் இலக்க பிரகடனத்தின் கொள்கைகளுடன் இணங்குவதாகும். மேலும், வீட்டுப்பணியாளர்கள் சமூகத்தில் அத்தியாவசிய தொழிலாளர்களாக உள்ளனர் என்ற உறுதியான செய்தியையும், அவர்கள் சட்டப்பூர்வமான பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் கௌரவமான தொழிலுக்கு தகுதியுடையவர்கள் என்ற முக்கியக் கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றது.

இறுதியாக, தரநிலைப்படுத்தப்பட்ட தொழில் ஒப்பந்தத்தின் பயன்பாட்டை வழமையான நடைமுறையாக மாற்றவும், இலங்கையில் உள்ள ஒவ்வொரு வீட்டுப்பணியாளருக்கும் நீதியும், கண்ணியமும், மரியாதையுடன் கூடிய தொழிலையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்துகின்றது.

ஜோனி சிம்ப்சன்

இக்கருத்துப் பகிர்வாளர் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் ஆவார். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமானது தொழில் உலகிற்கான ஐக்கிய நாடுகளின் ஒரு விசேட முகவர் அமைப்பாகும். மேலும் இது தொழில் நியமங்களை நிர்ணயிப்பது, முத்தரப்பு சமூக உரையாடல்கள் மூலம் கண்ணியமான வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதியை உலகெங்கிலுமுள்ள அனைவருக்கும் மேம்படுத்துவதை தனது பணிக்கூற்றாகக் கொண்டுள்ளது.